Tuesday, November 15, 2011

பக்தி இல்லாவிட்டால் என்னாகும்?

பக்தி இல்லாவிட்டால் ஒழுக்கம் கெட்டுவிடும், மனிதன் காட்டு மிராண்டியாகிவிடுவான் என்கிறார்கள் சில இறை வக்காலத்து வாதிகள்.
இந்த உலகத்தை சற்று உற்றுக் கவனிக்கும் யாராவது இங்கு அனைவரும் மகிழத்தக்க வகையில் ஒழுக்கம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? காலம் காலமாக பரப்பப்பட்ட பக்தி ஒழுக்கத்தை வளர்த்திருக்கிறதா?
இறை நம்பிக்கையாளன் ஏமாற்றுவதில்லையா? தவறு செய்வதில்லையா? இறைவன் சொன்னதாக சொல்லப்படும் வாசகங்களை எழுதி வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டும் ஆட்டோக்காரர்களில் பெரும்பாலானவர்கள் நடந்து செல்பவர்கள் வழிகேட்டால்கூட சொல்ல மாட்டேன் என்கிறார்கள். ஆட்டோவில் சவாரி வருகிறாராயா? என்றுதான் கேட்கிறார்கள்.
பூசணிக்காயை உடைத்து, சாம்பிராணி காட்டி வியாபாரத்தை தொடங்கும் ஒவ்வொருவனும் யாரிடமாவது கூடுதலாக ஒரு பைசா லாபம் வைத்து (ஏய்த்து) விற்று விடலாமா? என்று நாள் முழுவதும் காத்துக் கொண்டிருக்கிறான்.
பக்தர்கள் இப்படி இருக்கும்போது மதங்களும், தெய்வங்களும்கூட பிரிவினையையும், ஒழுக்கக்கேட்டையும் வற்புறுத்துகின்றன.
நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்கிறார்கள் ஒரு மதத்தினர்.
தேவனை ஒத்துக் கொள்ளாதவர்கள் எல்லாம் சாத்தானின் குழந்தைகள் என்கிறார்கள் இன்னொரு மதத்தினர்.

தங்கள் இறைக்கருத்தை எதிர்ப்பவர்களை, சாடுபவர்களை அழிப்பது புனிதப்போர் என்கிறது ஒரு மதம்.
அன்பையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் அத்தனை தெய்வங்களும் ஆயுதம் ஏந்தி நிற்கின்றன. தானே படைத்துவிட்டுவிட்டு தன்னை நம்பாதவர்களை மீளாத நரகத்தில் தள்ளுவேன் என்கின்றன ஒவ்வொரு தெய்வங்களும்.
ஒரு அவதாரத்தில் ஒருத்தியுடன் வாழ வேண்டும் என்று சொல்கிறது ஒரு தெய்வம். அடுத்த அவதாரத்தில் அந்த ஊரில் உள்ள அத்தனை பெண்களையும் (கோபிகைகள்) ஆடையின்றி நிற்கவைத்து ரசித்து ஆனந்தப்பட்டு திருவிளையாடல் புரிகிறது அதே தெய்வம். இன்னொரு மதம் சொல்கிறது இங்கே ஒரு மனைவியுடன் ஒழுக்கமாக வாழ்ந்தால் சொர்க்கத்தில் பல பெண்களுடன் இன்பம் அனுபவிக்கலாம் என்று..
இப்படி எல்லா தெய்வங்களும், மதங்களும் நிறைய கறைபடிந்தே நிற்கின்றன. அவை சொல்லும் ஒழுக்கங்களும் அந்த அளவிலானவையே.
எந்த தெய்வமும் ஒழுக்கமாக பிறந்ததாக சொல்லப்படவில்லை. தானாக தோன்றியது சுயம்புவாம். ஆவியால் கர்ப்பமான கன்னி, ஒரு தெய்வத்தை பெற்றெடுத்திருக்கிறாள். (அவரை நம்புபவர்கள் வீட்டில் உள்ள கன்னிகைகள் ஆவியால் குழந்தை பெற்றேன் என்றால் ஏற்றுக்கொள்வார்களா? சந்தேகப்படுவார்களா?) இன்னொரு தெய்வம் ஒளிக்குப் பிறந்ததாம்.
இப்படிப் பிறந்த தெய்வங்கள் ஒழுக்கமாக வாழ்ந்து மனிதர்களுக்கு நீதி போதித்திருக்கின்றன. அறிவுரை வழங்கிச் சென்றிருக்கின்றன.
தெய்வங்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்தும் இங்கு அமைதியும், ஒழுக்கமும் இல்லை. அப்படியானால் தெய்வங்களின் அவதாரம் பொய்யாக இருக்கலாம். அல்லது முன்னோர்களில் சிறந்தோருக்கு சிறப்பு சேர்ப்பதாக எண்ணி சொல்லப்பட்ட விஷயங்கள் அவர்களை தெய்வமாக்கி பின்னால் வரும் சந்ததிகள் பேசும் அளவுக்கு உயர்ந்திருக்கலாம்.
எனவே உயர்த்திச் சொல்லப்படுவதால் அவை உண்மையாக இருக்காது. பயமுறுத்தி வளர்ப்பதால் ஒழுக்கமும் வளராது.

Monday, November 14, 2011

ஆலயங்கள் ஏன் கட்டப்பட்டன

இறைவன் இருப்பது உண்மையில்லாமலா இத்தனை கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன, இலக்கியங்கள் இயற்றி இருக்கிறார்கள். அனேகர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்ற சந்தேகம் புதிதாக வரும் ஒவ்வொரு தலைமுறையினரிடமும் எழும்.
நான் அறிந்த படி....
எழுத்தால் ஆன இலக்கியங்களும், கட்டிடங்களால் ஆன கோவில்களும் காலத்தால் பிந்தியவை. இதை உணர சிறிது யோசித்தால் போதுமானது.  மனிதன் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்படுகிறது. ஒன்றேகால் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி குடியிருந்த ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து ஐரோப்பாவுக்கு இடம் பெயர்ந்ததாக சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அவன் கற்களை ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கியது 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான். தீப்பொறியை கண்டுபிடித்து 15 லட்சம் ஆண்டுகளாகிறது. இப்படி அவன் படிப்படியான வளர்ச்சி பெற்று விலங்கு மனிதனில் இருந்து ஆடை அணிந்த மனிதனாக மாறுவதற்கே எத்தனை ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டானோ?. சைகை மொழியில் இருந்து வாயால் ஒலியெழுப்பி வாழத் தொடங்கிய காலம் அதற்கும் பிந்தையது. எழுத்துக்களை பயன்படுத்தத் தொடங்கிய காலம் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நமக்கு கிடைத்திருக்கும் சான்றுகள்படி இன்று வழக்கிலுள்ள சீர்பட்ட எழுத்துக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிற்பட்டவைதான். அதற்கு முன்புள்ள கல்வெட்டு எழுத்துக்கள், சுவடி எழுத்துக்களை ஆய்வு செய்யாமல் ஒப்பிட்டால்கூட இதை எளிதாக புரிந்து கொள்ளலாம். வழக்கில் உள்ள மொழிகளில் மூத்தவையாக அறியப்படுபவை லத்தின், தமிழ் போன்ற சில மொழிகள்தான். இவற்றில் கிடைக்கப் பெற்ற இலக்கியங்கள் இரண்டாயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டவை. மனிதன் குகைகளில் வாழ்ந்து கூடாரத்துக்கு குடிபெயர்ந்து குட்டிச்சுவர் கட்டி குடிசைக்கு உயர்ந்து கல்களை வைத்து கட்டிடங்கள் எழுப்பிய காலமும் இதுபோல சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான். இவையாவற்றுக்கும் தொல்லியல் சான்றுகள் உண்டு.
ஆலயங்களுக்கு சென்ற காலம் தவிர்த்து அறிவின் ஆலயங்களாக விளங்கும் நூலகங்களுக்கும், அருங்காட்சியகங்களுக்கும் பயணித்தவர்களுக்கு இந்த உண்மை விளங்கும். அல்லது பள்ளியில் வழங்கும் பாடப்புத்தகங்களில் படித்தவற்றுக்கும், பண்டிதர்களாக எண்ணிவரும் பெரியவர்கள் சொன்ன (பச்சைப்புழுகு) ஆன்மிக கதைகளுக்கும் முரண்பாடு தெரிகிறதே என்று மூளைக்குள் வினாதொடுத்து தேடலை முடுக்கிவிட்டிருந்தாலும் உணர்ந்து கொள்ளலாம்.

ஆக எழுத்துக்கள் தோன்றிய காலம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்பது தெளிவாகிறது. ஆனால், ராமன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவன் என்றும், கீதை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடவுளால் உபதேசித்து எழுதப்பட்டவை என்றும், வேதம் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு, எங்களுக்கு ஓத உரிமை வழங்கப்பட்டது என்று சொல்வதையும் சிறிதும் சிந்தியாமல் ஒப்புக்கொள்ளவும், நம்பவும் முடிகிறது என்றால் பெரியார் கூறியதுபோல அதை நம்புபவர்களுக்கு மூளையில் விலங்கிடப்பட்டுள்ளது என்பதுதானே உண்மை.
நான் பள்ளியில் படித்தபோது ஒரு கேள்வி கேட்டார்கள்.
உடலுக்கு ஆற்றல் தருபவை எவை?
புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்ஸ் என்பதுதான் பதில். நன்றாகப் படித்தவன் முதல் கடைசி மதிப்பெண் பெற்றவன் வரை யாவரும் இந்தப் பதிலைத்தான் சொன்னார்கள்.
ஆனால் பள்ளியைவிட்டு வெளியே வந்ததும் உன்னை இயக்குபவன் யார்? என்று கேட்டால், முதல் மதிப்பெண் பெற்றவன்கூட, என்னை இயக்குபவன் ஆண்டவன் என்று சொல்லி கன்னத்தில் போட்டுக் கொள்கிறான்.
ஏன் இவன் பார்வையில் ஆண்டவனும் புரோட்டினும் ஒன்றா? இல்லை, எதையும் அறிந்து கொள்ளாமல் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையா இவன்?
சில காலம் புரோட்டின் (உணவு) சேர்க்காவிட்டால் இவன் நம்பும் இறைவன் இவனை இயக்குகிறானா என்பது உடனே தெளிவாகிவிடும். செய்து பார்ப்பர்களா இறைவனை நம்புபவர்கள்?
தன்னை, தன் உடலை இயக்கும் சக்தி மேற்கண்ட சத்துக்கள் என்று பள்ளியில் சொல்லிவிட்டு வெளியில் வந்து ஆண்டவன், ஆத்மா என்று சொல்கிறார்களே கொஞ்சமாவது மூளை வேண்டாமா?
ஒவ்வொருவராலும் இப்படிச் சொல்ல முடிகிறது என்றால் கடவுள் நம்பிக்கையின் பேரில் சொல்லப்படுவதை அப்படியே நம்பி வந்த முட்டாள்தனத்தால், மூளையில் விலங்கிடப்பட்டுள்ளது என்பதுதானே உண்மையாகிறது.
இதற்கு அடிப்படையாய் இருந்து வந்தது 1) ஆதிமனிதனின் அறியாமை. அடுத்ததாக 2) அறிவால் தெளிந்து சூது மதி கொண்டு செயல்பட்ட அறிவைக் கெடுத்த ஆசான்கள். 3) ஒரு குலத்திற்கு ஒரு நீதி என்று எழுதியதோடு, இன்றுவரை அந்த அநீதியை தூக்கிப் பிடித்து வரும் கறைபடிந்த நீதிமான்கள். 4) இவற்றை ஆராயாமல் ஏற்றுக் கொள்ளத் தொடங்கும் முட்டாள் மாக்கள்.
மேலும் பக்தி பரப்பப்படும் விதமும் அவனது வாழ்வோடு ஒன்றி மூளையை மழுங்கடிக்கச் செய்வதாக இருக்கிறது. அதாவது... அன்றன்றுக்குரிய அப்பத்தை அன்றே சாப்பிட வேண்டும், எனவே தினமும் ஒரு வசனமாவது வாசியுங்கள்.
தினமும் 5 முறை தொழுகை செய்யாவிட்டால் மனிதமனம் தீயவற்றின் பின்னால் சென்றுவிடும்.
காலை மாலையாவது சாமி கும்பிட வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் கடவுளை நினைத்து பிரார்த்திக்க வேண்டும், இரவில் தூங்கும் முன் நன்றி சொல்ல வேண்டும்.
இப்படி தினமும் அந்த காரியத்தைச் செய்யச் சொல்லி குழந்தை முதலே பழக்கப்படுத்தி வருவதால் அதைப்பற்றி பெரிதாக ஒன்றும் யோசிக்கத் தோன்றுவதில்லை. யோசனையுடன் செயல்பட்டாலும் நாங்கள் சொல்வதைக் கேள், அப்படியெல்லாம் கேட்கக்கூடாது என்று தடை செய்கிறார்கள்.
மேலும் மாதத்துக்கு ஒரு திருவிழா வீதம் கணக்கிட்டு கொண்டாடி, கூத்தடித்து அறிவை மழுங்கடித்தும் வைத்திருக்கிறார்கள்.
ஆக இலக்கியங்கள் மனிதன் இயற்றியவை, தினமும் திணிக்கப்பட்டு நிலை பெற்றவை என்பதை பார்த்தாகிவிட்டது. அடுத்ததாக கோவில்களுக்கு வருவோம்.
கோவில்கள் அரசர்கள் ஆட்சி செய்யும் இல்லங்கள் (கோ+இல்) என்று பொருள் கொள்ளப்பட வேண்டும். மன்னர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக கோவில்கள் கட்டப்பட்டன. குளங்கள் வெட்டப்பட்டன. ஊர்ப்பயணம் புறப்படுபவர்கள் தங்கும் இடங்களாக ஆலயங்களும், சத்திரங்களும் பயன்பட்டன. அரசனின் வரி சேகரிக்கும் இடமாகவும் கோவில்கள் இருந்தன. நலத்திட்டங்கள் (அரசனிகன் கட்டுப்பாட்டு இடமென்பதால்) கோவில்களை மையப்படுத்தி செயல்படுத்தப்பட்டன.
நம்பிக்கையின் பேரில் புத்தியை மழுங்கச் செய்த பின்னர் கோவில்களுக்கு புனிதம் கற்பிக்கப்பட்டது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரித்து வைத்தனர். முறையற்ற வகையில் கட்டாய நிதி பிரித்து ஆலயங்களுக்கு சிறப்பு சேர்க்கப்பட்டது. விழாக்கள் எடுக்கப்பட்டது.
ஆக கோவில்களும், சாத்திரங்களும் காலத்தால் பிந்தியவை, மனிதனே எழுதியவை, படைத்தவை என்பது நன்கு புலனாகிறது.
ஒருவன் நேற்றைய பொழுதுக்கு இன்றைய பொழுது மாற்றமும், ஏற்றமும் பெற்றிருந்தால்தான் முன்னேறி இருப்பதாக பொருள் கொள்ள முடியும். பழங்காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் மட்டுமே உண்மையானவை, இப்போது நாம் சிந்திப்பவை எல்லாம் வீணானது என்ற எண்ணம் மாறினால் ஒழிய முன்னேற்றம் கிடைக்கவே கிடைக்காது. ஒழுக்கச் செய்திகள் சில சொல்லப்பட்டு இருப்பதால் அவை அனைத்தும் உண்மையானவை, நலமானவை, நம்பிக்கையானவை என்று சொல்வது நமக்கு புத்தி செயல்படவில்லை என்பதை காட்டுவதாகும். தன்னால் இதைவிட சிறப்பாக செயல்பட முடியாது என்று ஒப்புக்கொள்வதே ஆகும்.
பழையனவற்றை விமர்சிக்கும்போது கெட்டதை, ஆபாசங்களை மறந்துவிட்டு நல்லதை மட்டுமே ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள் சிலர். இது பாலில் கலந்த நஞ்சை மறந்துவிட்டு சுகமாக பருக வேண்டும் என்பதற்கு ஒப்பாகும்.
குறை நிறைகளை விமர்ச்சிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்து இளைய தலைமுறையினருக்கு ஆய்ந்தறியும் பகுத்தறிவு சுதந்திரம் வழங்க வேண்டும். அப்படி இல்லாமல், மூடநம்பிக்கைகளை பின்பற்றாமல் விரும்பாமல் வாழ்வை நடத்த விரும்பும் இளைய தலைமுறையிடம்... நாங்களெல்லாம் முட்டாள்களா? நீ சொல்வதை ஏற்க முடியாது, என் மானம்மரியாதையை கெடுக்கப் பார்க்கிறாயா, ஊரோடு ஒத்துப்போய்விடணும், ரொம்ப கஷ்டப்படப் போகிறாய், நான் உயிரை மாய்த்துக் கொள்வேன்? என்று மிரட்டுவதும், பயங்காட்டுவதுமாக வளர்த்து வந்தால் இல்லாத பூச்சாண்டியை எண்ணி ஏமாறும் சிறு குழந்தை தனத்துடன்தான் இளைய சமுதாயம் வளர்ந்து வரும்.
இப்படிப்பட்ட பக்தி இல்லாவிட்டால் உலகம் உருப்படாதா? இன்னும் சிந்திப்போம்

கடவுள் படைப்பா உலகம்

கடவுள் உலகை படைக்கவில்லை என்கிறாயே நீ எப்படிப் பிறந்தாய்? என்று சிலர் கேள்விகேட்டார்கள். நான் என் தாய்தந்தையர் உறவால்

பிறந்தேன் என்பேன். உன் தந்தை, தாத்தா என்று அப்படியே போனால் முதல்மனிதன் எப்படிப் பிறந்திருப்பான் என்று கேட்டார்கள்.
(ஒருவன் எப்படி படைக்கப்பட்டான் என்று தெரியாவிட்டால் என்னவென்றே தெரியாத ஒன்றை வணங்க வேண்டுமா என்ன? அப்படி விவரம்

தெரியாததால் தனக்கு மேம்பட்ட சக்தியை வணங்குகிறேன் என்று சொன்னால் அது அறியாமையைத் தானே தெய்வம் என்று குறிக்கிறது.

தனக்கு மேம்பட்டிருந்தால் விழுந்து வணங்கிவிடுவேன் என்றுதானே ஆகிறது)
முதல் மனிதன் எப்படி தோன்றினான் என்பதற்கு எனக்கு விடை தெரியாவிட்டாலும் ஆண்பெண் கரு சேர்க்கை இல்லாமல் உயிர்

உருவாகாது என்பது எனக்குத் தெரியும். ஒருவனால் யாவற்றையும் படைத்திருக்க முடியாது என்பதையும் அறிகிறேன். அறிவியல்

சொல்வதுபோல படிநிலை பரிணாம வளர்ச்சியில் ஓர் உயிர் மற்றொரு இனமாக வளர்ந்து பிரிந்திருக்க வாய்ப்புகள் இருப்பதை சற்று

கவனித்தால் உணர்ந்து கொள்ளலாம்.
கடவுளின் படைப்பு என்பதைவிட படிநிலை வளர்ச்சிக்கே அதிக சாத்தியங்கள் இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு

ஆதாரங்கள் நிறையவே காட்ட முடியும். காட்டியிருக்கிறார்கள்.
நான் அதை நம்புவதற்கு காரணம் என்னவெனில் அது கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு ஏற்றுக் கொள்ளத்தக்கதாயும், தெரியாத

விஷயங்களை இட்டுக்கட்டி சொல்லாததாகவும் இருக்கிறது.
படைப்பதற்கு மூலமாக ஒருவன் வேண்டும் அவனையே கடவுள் என்கிறோம் என்கிறார்கள் பக்தர்கள். அப்படி வைத்துக் கொண்டால்

ஆண்டவன் மட்டும் யாரும் படைக்காமல் உருவானானா? என்ற கேள்வி எழும்.
பகுத்தறிவு முன்னோடி, அறிஞர் இங்கர்சால் இப்படி கேட்கிறார்.
கடவுள் உலகைப் படைத்தார் என்று வைத்துக்கொண்டால் அவர் படைக்கும் முன்பாக இங்கு எதுவுமே இல்லை. ஒரு பொருளை உற்பத்தி

செய்ய அதற்கு தேவையான மூலப்பொருள்கள் வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அவர் படைப்பதற்கும் மூலப்பொருட்கள்

தேவைப்பட்டிருக்க வேண்டும். அப்போது அவரைத் தவிர எதுவுமே இல்லாததால் அவர் தன்னில் இருந்தே பிரபஞ்சங்களை படைத்திருக்க

வேண்டும். தன்னில் இருந்து எல்லாவற்றையும் படைத்திருந்தால் அவர் ஜடத்தன்மை உடையவராகிறார் என்கிறார்.
ஜடத்தன்மைக்கும், மனிதத் தன்மைக்கும் வேறுபாடு உண்டு. உலகம் ஜடத்தன்மை உடையது என்பதால் புத்திக்கூர்மையுடன் செயல்படாது.

ஏனெனில் ஜடப்பொருள்கள் இயல்பை மீறி செயல்படாதவை. அது உங்களை கவனிக்கவோ, கட்டுப்படுத்தவோ, வேண்டுகோளை ஏற்று

செயல்படவோ திறனற்றது.
அதனை இயற்கையென்று கொள்வதில் என்ன பிழையிருக்கிறது. இறைவன் என்று உயர்த்திப்பிடித்து அதற்காக பல பொய்கள்,

புராணங்களைக் கூறி வழிபாடு என்று விழாக்கள் நடத்தி, மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி பிறரிடம் ஏமாந்து போகவும், துணைக்கு

வருவாரா என்று ஏங்கித் தவிக்கவும், தன்னிடத்திலும், வாழ்விலும் நம்பிக்கையின்றி ஆறுதல் தேடி அலையவும் செய்ய வேண்டுமா?.
இங்கர்சால் இன்னும் தெளிவுபடுத்துகிறார்...
பொருள் தன்மை உடைய பிரபஞ்சத்தில் கோள்கள் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டிருக்கின்றன. இது அதன் இயங்குசக்தியை

காட்டுகிறது. இந்த இயக்கத்திற்கு தேவையான சக்தியை இதன் உள்ளாக இருந்தோ, அப்பால் இருந்தோ கடவுள் வழங்குகிறார் என்றால்

அவர் சக்தி உடையவர் என்றாகிறது.
சக்தி உள்ள எதுவும் வெளியிடுவதற்குத் தேவையான சக்தியை திரும்ப பெற்றுக்கொள்ளவோ உற்பத்தி செய்யவோ வேண்டும். கடவுள்

காலம்தோறும் சக்தி வழங்குவதாக வைத்துக்கொண்டால் அவர் எங்கிருந்து சக்தி பெறுகிறார். கொடுக்கப்பட்டதுபோக அவரிடம் எவ்வளவு

சக்தி மீதமிருக்கிறது. சக்தியை அவர் மனிதன்போல உணவின் மூலமாக பெற்றுக்கொள்கிறாரா? அல்லது தாவரங்கள்போல உற்பத்தி

செய்கிறாரா? சக்தியை ஓயாது கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவர் சக்தியை திருப்பி பெற்றுகொள்ளாமல் இருக்கிறார் என்பதை யாராவது

நம்ப முடியுமா?. அப்படி இருந்தால் அவர் அழிந்து வருகிறார் என்பதுதானே பொருள்.
இங்கு எல்லாமே இயங்குவதால் அதை இயக்க ஒருவர் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையற்றது. பிரபஞ்சத்தின் மிகச்சிறு கூறாக

கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அணுவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் அணுக்களின் சேர்க்கையால் உருவான

பொருட்களும், இயங்கு சக்தியைக் கொண்டிருக்கின்றன. இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பார்வைக்கு இயக்கமற்று இருப்பதாகத் தோன்றும் பொருட்களும்கூட இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. மின்னாற்றல்

கிடைக்கும்போது திடப்பொருட்கள், திரவப்பொருள் யாவற்றின் இயக்கத்திலும் இன்னும் பல மாறுதல்கள் ஏற்பட்டு வேறுவிதமாக

இயங்குவதை நாம் கண்கூடாகக் காணலாம்.
உயிர்களும் இப்படி இயல்பான இயக்கத்தின் ஊடே நிகழ்ந்த மாற்றத்தின் காரணமாக வேறுவிதமான இயக்கம் பெற்றிருக்கிறதே தவிர

இதில் வேறு அதிசயங்கள் மறைந்திருப்பதாக கொள்ள வேண்டியதில்லை.
ஆக பொருளும், சக்தியும் படைக்கப்படவில்லை. இவை ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. இயல்பிலேயே இயக்கமுடைய ஒன்றை

இயக்குபவனும், படைத்தவனுமான இறைவன் ஒருவன் இல்லவே இல்லை.
என்றும் மாறாத ஒரு அறிவியல் உண்மை என்னவென்றால் இங்குள்ள எந்த ஒன்றையும் முழுமையாக அழிக்க முடியவில்லை

என்பதுதான். நாம் ஒரு பொருளை மாற்றம் செய்து பயன்படுத்த முடியும், அதன் ஆற்றலைப் பெற்று மற்றொரு தேவைக்குப் பயன்படுத்த

முடியும்.
இதில் இருந்து விளங்க முடிவது என்னவென்றால் எதை அழிக்க முடியவில்லையோ அது ஆக்கப்பட்டிருக்கவும் முடியாது. ஏனெனில் எது

சேர்கிறதோ அது பிரியும், எது பிரியக்கூடியதோ அது எல்லா காலத்திலும் பிரியாமல் சேர்ந்து நிலைத்திருக்காது. எது அழியவில்லையோ

அது மீண்டும் உருவாகாது, ஏனெனில் அது அழியவே இல்லையே. பிறகு ஏன் அது உருவாக வேண்டும், உருவாக்கப்பட வேண்டும்.
எனவே அழியாத தன்மை பெற்றிருக்கும் அணுக்கள் படைக்கப்பட்டிருக்கவும் முடியாது. இயக்கமுள்ள அணுக்களை இயக்க யாரும்

தேவையும் இல்லை.
இயங்கும் அணுக்களால் ஈர்ப்பு சக்தி உருவாகும். ஈர்ப்பு சக்தியால் இணைப்பு உருவாகும். இணைந்து பொருள் உருவாகும். அவையும்

இயங்கும்.
உராய்வு, ஈர்ப்பு, அழுத்தம் காரணமாக மின்னாற்றலும் கிடைக்கும். அந்த ஆற்றலால் இயங்கும் பொருட்களின் இயக்கத்தில் வேறுவிதமான

மாற்று இயக்கமும் உருவாகும். அப்படி ஏற்பட்ட ஒரு மாறுபட்ட இயங்கு திறனுடையவன்தான் மனிதன் மற்றும் உயிரினங்கள்.
எனவே இயங்கும் அணுக்களின் சேர்க்கையில் உருவான உலகம் இயங்குவதிலும் சுற்றுவதிலும் எந்த வியப்பும் இல்லை. இந்த பூமி

மீண்டும் அணுக்களாக சிதறும். சிதறும் பல அணுக்கள் ஒன்றிணைந்து சிறு கோளாகலாம். அதில் ஏற்படும் தட்ப வெப்ப நிலைகளுக்கு

ஏற்ப உயிரினங்கள் மீண்டும் தோன்றலாம்.
எனவே எல்லாம் ஆண்டவன் படைத்த அதிசயம் என்றெண்ணி வாயைப் பிளந்து வாழ்த்தவும் வேண்டியதில்லை, வாயை மூடி வணங்கவும்

வேண்டியதில்லை.
ஆக பூமி மற்றும் அண்டசராசரங்கள் அனைத்தும், ஏசு கிறிஸ்து வா என்றதும் வந்ததுமல்ல. தனியொருவர் சுயம்புவாகத் தோன்றி

தன்போலவும், தன்னை வணங்குவதற்காகவும் பலரைப் படைத்து உருவாக்கியதும் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
படைப்பின் வழியாக இறைவன் இல்லையென்று மறுத்தபிறகு மற்ற எல்லாம் புனைகதை என்று உரைக்க வேண்டிய அவசியமில்லை.

இருந்தாலும் இன்னும் சில வினாக்களையும் எனது அறிவிற்கு எட்டியபடி விவரிக்கிறேன்.

Sunday, November 13, 2011

கடவுளை ஏன் நம்ப வேண்டும்


ஒரு மனிதன் ஏன் கடவுளை நம்ப வேண்டும்?, நீங்கள் எதற்காக கடவுளை நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள்? என்றுதான் என்னிடம் கடவுள் பற்றிப் பேசுபவர்களிடம் நான் முதலில் கேட்பேன்.
இந்தக் கேள்விக்கு நிறைய பேர் பதிலளிக்க முடியாமல் திகைப்பார்கள். சிலர் நம்மைப் படைத்தவர் அதனால் வணங்குகிறேன் என்பார்கள். (படைப்பு அவரால் நிகழ்த்தப்பட்டது அல்ல என்பது பின்னால் விளக்கப்படுகிறது.)
ஆனால் இப்படி சொல்பவர்களின் நம்பிக்கையும், பக்தியும் எத்தகையது என்பதை பார்த்தோமானால் வினோதங்களை உணரலாம். பக்தர்கள் வேண்டிக் கொள்ளும் சில பொதுவான காரணங்கள். தங்களது தெய்வங்கள் தங்களது பிரச்சினைகளில் தலையிட்டு தங்களுக்கு துணை செய்ய வேண்டும்,
இழந்த உடல் நலம் திரும்ப வேண்டும், தங்களுக்கு பிரியமானவர்கள், தொலைவில் இருக்கும் தான் விரும்பும் நபர் ஆகியோர் பாதுகாக்கப்பட வேண்டும், நலமாக இருக்க வேண்டும்,
வான் மழை வேண்டும்,
சொத்து சுகம் வேண்டும், அறிவு வேண்டும்,
இழந்தவை, பழையன திரும்ப வேண்டும். பேய்பிசாசுகளிடம் இருந்து தங்களை காக்க வேண்டும்
மேற்கண்டவைகளில் ஒன்றை குறிப்பிட்டு வேண்டுவோர் ஏராளம்.
இவை தவிர, சில சமயங்களில் நீர் எனக்கு உதவியதற்கு நன்றி என்றும், பிரார்த்தனை கைகூடாததுபோல் உணர்ந்தால் கடவுளே நீர் விட்டவழி ஆகட்டும் என்றும் வேண்டுகிறார்கள்.  கடவுளே தங்களை சோதிக்காமல் இருக்க வேண்டும் என்று மன்றாடுவோரும் இருக்கிறார்கள்.
இவர்களின் வேண்டுதலை கவனித்துப் பார்த்தால் படைத்ததற்காக வேண்டுவதுபோல் தெரியவில்லை. தேவை கருதியும், கவலைகளை தீர்க்க வேண்டியுமே கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் கடவுளை நம்புவோரும் நிம்மதியாக இருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் காலம் காலமாக நம்பி வந்தும் அவர்களுக்கு துன்பமும், துயரமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை உணர முடிகிறது. மனிதனும் தான் கடவுளை நம்புவதாக கூறிக் கொண்டாலும், வேண்டிக் கொண்டாலும் அடுத்த நிமிடமே நாம் செயல்பட்டால்தான் நமக்கு வெற்றி என்பதை உணர்ந்தவனாக செயல்பட கிளம்பிவிடுகிறான். ஆனால் அவன் தன்னை பக்திமான் என்று சொல்லிக் கொள்வானாம். சொல்லிக் கொள்ளலாமாம். ஆனால் என்னப்பா இது வேண்டினால் நடக்கவில்லையே, நாம் செயல்பட்டால்தானே நடக்கிறது? அது முயற்சியின் பலன் என்று ஒப்புக் கொண்டால் என்ன? என்று கேட்டால் நான் நாத்திகனாகிவிடுவேனாம். என்ன வினோதம் பாருங்கள்.
மக்களின் பக்தி இந்த நிலையில் இருந்தாலும், வேண்டுதலுக்கு பலன் கிடைக்கிறதா? பலன் கிடைக்காவிட்டால் யாரைக் கேட்பது என்பதெல்லாம் கேட்கக்கூடாத கேள்விகளாம்? அப்படி கேட்பவர்களுக்கு தண்டனையளிக்க நரகமென்று தனி உலகம் வைத்திருக்கிறானாம் அந்த ஆண்டவன். நாத்திகனென்று தனிப் பெயர் சூட்டுகிறார்கள் இந்த பக்தகேடிகள்.
உனக்கு நல்ல மனைவியை அனுப்பி பகவான் பதில் சொல்லுவார்? உனக்கு வரும் மனைவி மிகுந்த பக்தி உள்ளவளாக இருப்பாள். நீ நிரம்ப துன்பப்படுவாய் அதன்பிறகுதான் உனக்குத் தெரியும்? திருந்துவாய்? என்று பலர் சாபமிட்டிருக்கிறார்கள்.
பகவான் இந்த வேலையைத்தான் பார்க்கிறாரோ? நான் என்ன பாவம் செய்தேன் என்று கேட்டால் எனக்கு பதிலளிக்க மாட்டாராம். அதற்குப் பதிலாக எனக்கு ஒத்துவராதவரை வாழ்க்கைத் துணையாக அனுப்பி வைக்கும் வேலையைத்தான் அவர் செய்வாரோ? நான் துன்பப்படுவதைப் பார்த்து சந்தோஷம் காணும் அற்ப பிறவியா ஆண்டவன்? அல்லது கோபமாகி கத்தும் காட்டு மிராண்டி பக்தர்களின் ஏவலைக் கேட்டு எனக்கு எதிராக செயல்படும் கயவனா? (பக்தன் பகவானுக்கு கொடுக்கும் வேலையை பார்த்தீர்களா? என்னை துன்பப்படுத்த அவனை அவதாரம் எடுக்கச் சொல்கிறார்கள். நான் அவர்களை கேள்வி கேட்டால் மனம் புண்படுகிறதாம். பழிக்குப் பழி கேட்கிறார்கள் போலும். அன்பை வலியுறுத்தும் மதங்கள் உருவாக்கிய பக்தர்களின் அன்பையும், பண்பையும் அளவிட்டுக் கொள்ளுங்கள்).
சரி போகட்டும். நம்மை நாத்திகன் என்பவர்களுக்கு நாத்திக தலைவன், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் சொல்லும் விளக்கம் ஒன்று இந்த இடத்திற்கு நெஞ்சில் நிற்கும்படியாக வெகு பொருத்தமாக இருக்கும்.
கடவுளை மறுப்பவன் நாத்திகன் என்று சொல்கிறார்கள். இந்த பதத்தை உருவாக்கிய ஆத்திகனுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டவன் ஆவோம். கடவுள் என்ற ஒன்று உண்மையாக இருக்கிறது என்று நம்புபவன், நினைப்பவன் அதை மறுக்க முடியும் என்று சிந்திக்க முடியாது. கடவுள் உண்மையில் இருந்தால் அதை மறுக்கவும் முடியாது. அப்படி இருக்கும்போது பின்னால் வருபவர்கள் இதனை சந்தேகப்படலாம். சந்தேகப்பட்டு மறுப்பவர்கள் நாத்திகன் என்று எழுதி வைத்திருக்கிறானே இதில் இருந்தே கடவுள் என்பதை அவனே மறுத்திருக்கிறான் என்பது விளங்கவில்லையா? என்று பெரியார் கேள்வி கேட்கிறார்.
இது ஒருபுறம் இருக்கட்டும், எந்த பக்தனாவது கடவுளை நம்புகிறானா? என்று பார்த்தால் அதுவும் இல்லை.
கோவிலுக்கு செல்லும்போதுகூட பக்தன், தன் உடமைகள் பத்திரமாக இருக்குமா என்று சந்தேகப்படுகிறான். காலணி காணாமல் போகுமோ என்று அஞ்சுகிறான். இதை கொஞ்சம் பார்த்துக்கிறீங்களா, நான் இப்போ வந்துடுறேன்னு கிளம்புகிறான். கடவுள் நம் எல்லோரையும் காப்பாத்துவான், வேண்டியதை தருவான் என்று சொல்லிக் கொள்கிறான். ஆனால் காலணியைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கைகூட அவனுக்கு கிடையாது.
பட்டை அடித்துக் கொண்டு பயணம் கிளம்பும்போது பஸ்சில் முன் இருக்கைகளிலும், பின் இருக்கைகளிலும் அமர தயங்குகிறான். விபத்து ஏற்பட்டால் பாதிப்பு வந்துவிடுமாம். குழந்தை குட்டிகள் நடுத்தெருவுக்கு வந்துவிடுமாம். அதனால் நடுமத்தியில் இருக்கை பிடித்து அமர நினைக்கிறான். இப்படி நினைப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால் வேண்டுதல் மட்டும் போன காரியம் உருப்பட வேண்டும் என்பதாகவும், இறைவா என்னைக் காப்பாற்று என்பதாகவும் இருக்கிறது. வெளியே சொல்லிக் கொள்வதும் கடவுள் புண்ணியத்திலே எல்லாம் நல்லபடியா நடக்குது என்று பீற்றிக் கொள்கிறான்.
கடவுள்தான் திக்கற்றவர்களுக்கு பாதுகாப்பு என்று சொல்லிக் கொள்வான் ஆனால் எங்கே கிளம்பினாலும் வீட்டை திறந்து வைத்துவிட்டுச் செல்ல மாட்டான். திறந்து வைத்துவிட்டுப் போனால் பொருட்கள் இருக்காது என்பது தெரியும். அதனால் பூட்டுகிறான். அப்படி இருக்கும்போது நான் பாதுகாப்புக்காகத்தான் பூட்டுகிறேன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன குறைந்துவிடப்போகிறது. எல்லாம் இறைவன் தருகிறான், பாதுகாக்கிறான் என்று ஏன் இட்டுக்கட்டி வைக்க வேண்டும்.
கொடுக்க வேண்டியதை சரியான நேரத்தில் கொடுப்பான் எடுக்க வேண்டியதை எடுத்துக் கொள்வான் என்று ஏன் சொல்ல வேண்டும். அப்படியானால் நீங்கள் வீட்டைவிட்டு சென்றதும் உங்கள் உடமையை எடுத்து வேறு யாருக்கும் கொடுக்க விரும்புகிறானா? உங்கள் இறைவன். அப்படி வேறு யாருக்கோ கொடுக்க விரும்புவதை நீ சேர்த்து (மறைத்து) வைத்து யாரும் எடுத்து கொள்ளக்கூடாது என்று பூட்டி வைத்திருக்கிறாயா? அப்படியானால் அது உன் (பகவான்) நம்பிக்கைப்படி பார்த்தாலே குற்றமல்லவா?
கடவுளுக்கு காணிக்கை வேண்டும் என்று கேட்டால் பக்தன் தன்னால் முடிந்ததை தருகிறான். ஆனால் கடவுள் உன் வீட்டை எனக்குத் தரச் சொன்னார் என்று யாராவது கேட்டுப் பாருங்கள். யாரு காதுல பூ சுத்தப் பாக்குற. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் நம்மகிட்ட வேணாம் என்று அவனே எதிர்க்கத் தொடங்கிவிடுகிறான். அந்த அளவுக்குத்தான் அவனுக்கு கடவுள் மீது நம்பிக்கை.
ஆனால் ஏமாற்றுக் கூட்டத்தோடு இருக்க வேண்டி இருப்பதால் நானும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் என்று சொல்லுவதுபோல நான் நம்புகிறேன் என்று பாசாங்கு பண்ணுகிறான்.
இப்படிப்பட்டவர்களையெல்லாம் மன்னித்து சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்வானாம் அந்த ஆண்டவன். ஆனால், என்னய்யா இது, இறைவனின் ஆட்சியில் இருக்கும் பூமியில் எல்லாம் அநியாயமாக நடக்கிறது? என்றால், என்னை நாத்திகன் என்று ஏசுகிறார்கள். என்னைத் தாக்க துன்பங்களை அனுப்ப வேண்டும், அல்லது ஆயுதத்துடன் அவதரிக்க வேண்டும், பத்திரகாளியை (கோர உருவமும், ஆவேசமும் கொண்ட ஒரு தெய்வமாக சொல்லப்படுகிறது) எனக்கு மனைவியாக்கி சோதிக்க வேண்டும் என்று வேண்டுகிறான் பக்தன்.
இப்படி கூட்டத்தோடு கூட்டமாக இருப்பது பாதுகாப்பு என்று எண்ணிக் கொண்டு தன் சிந்தனையைக் கூட சொல்லாதவர்கள் நிறைய உண்டு.
நான் விவாதித்தபோது பலர் ஒப்புக் கொண்ட சில உண்மைகள் இங்கே தருகிறேன்...
பெரியார் மூட நம்பிக்கையைத்தான் விட்டுவிடச் சொன்னார்? அவர் கடவுள் இல்லையென்று சொல்லவில்லை என்கிறார்கள் சிலர்.
நான் பதில் சொன்னேன் (கடவுள் இல்லை என்பதோடு மட்டுமல்லாமல், இல்லவே இல்லை என்று உறுதிபடச் சொன்னவர் பெரியார் என்றாலும் கூட, அவர்கள் சொல்வதைப் போலவே பெரியார் சொல்லியிருப்பார் என்று வைத்துக் கொண்டால்)
சரி நீ மூட நம்பிக்கைகளை விட்டுவிட்டு ஒரு கடவுளைப்பார். அங்கு ஏதாவது இருந்தால் நீ தொடர்ந்து வழிபடு என்பேன்.
எதிர் தரப்பில் இருந்து பதில் வராது. ஒரு வேளை பதில் வந்தால் அது என்னால் முடியாது, நான் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் என்பதாக இருக்கிறது.
நீ சொல்வதை ஒத்துக் கொள்ளலாம், ஆனால் மற்றவர்களுக்குச் சொல்லி செயல்படுத்த முடியாது என்று சிலர் சொல்கிறார்கள்.
சரி நீ யாரையும் மாற்ற வேண்டாம், நீயாவது பின்பற்று என்று அவர்களிடம் சொல்லுவேன். ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு நழுவிவிடுவார்கள்.
நீங்க சொல்வது சரிதான். நானும் அதை நம்ப மாட்டேன். வீட்ல நொய் நொய்ன்னு அரிப்பாங்க. அதான் ஆளோட ஆளா (கோவிலில்) தலையைக் காட்டிவிட்டு வந்துடுவேன் என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற கோழைகள் நிறைய இருக்கிறார்கள். இவர்கள்தான் சமுதாயம் சாக்கடையாக இருப்பதற்கு மூலகாரணம். இவர்கள், யார் என்ன சொன்னாலும் மழுப்பிவிடுவார்கள். கண்டு கொள்ளமாட்டார்கள். காக்கா பிடித்து, எட்டப்பன் வேலையை கடைபிடித்து பிழைக்க வழி தேடுவார்கள். நடுநிலை வகிப்பதாக கூறிக் கொண்டு யார் எக்கேடு கெட்டாலும் எனக்கொன்றும் இல்லையென்பதுபோல நழுவிப் போய்விடுவார்கள்.
இன்னும் பலர் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்குமே என்று தங்கள் எண்ணத்தை வெளியில் சொல்வதில்லை. இருக்கிற காலத்தை இப்படியே கழிச்சிட்டு போயிடுவோம் நமக்கென்ன? என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் மீறி நாத்திகன் என்று ஒப்புக் கொண்டவர்களையும், அறிவியல் உண்மையைச் சொன்னவர்களையும் கொலைவெறியுடன் தாக்கி அழித்திருக்கிறார்கள் பக்தகேடிகள். அதனால்தான் உண்மையை உணர்ந்தவன்கூட அதை வெளிப்படையாக சொல்லாமல் கடவுளை நம்பு ஆனால் காளை மாட்டை கட்டி வை என்று எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டான்.
கடவுளை நம்பாதே உன் உடமையை நீயே பார்த்துக்கொள் என்றால் கேட்பானா புத்தி கெட்டுப் போன பக்தன். அவனுக்கு ஆத்திரம் மட்டும்தானே வரும். அதனால்தான் நம்பு ஆனா நம்பாதே என்கிற பாணியில் சொல்லி வைத்திருக்கிறார்கள் முந்தைய பகுத்தறிவுவாதிகள்.
இதையும் பக்திக் கதைகளில் ஒன்றாகச் சொல்லி சம்பாத்தியம் பார்க்கும் கயவர்களும் இருக்கிறார்கள். கடவுளை நம்பினாலும் நமது உடமைகளை நாம்தான் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற கருத்துக்காக இந்தக் கதையை சொல்லி வருபவர்களை நான் அறிவேன்.
நானும் பலரைப் போலவே கடவுள்தான் அனைவரையும் படைத்தார். நமக்குத் தேவையானவற்றை வழங்குகிறார் என்று நம்பி வணங்கி வந்தவன். ஆனால் அப்படி எதுவும் நடைபெறாததால் அதன்மேல் சந்தேகம் எழ அதைவிட்டு விலகத் தொடங்கினேன். அது உண்மையில்லை என்று உணரத் தொடங்கினேன்.
அது எப்படி உண்மையில்லை என்பதை இனி பார்க்கலாம்.

Saturday, November 12, 2011

சிந்திக்கத் தொடங்கும் வேளையிலே...

இதை எழுதும் முன்பாக பல யோசனைகள் என்னை புடம்போட்டன. முன்னோர்கள், கற்றோர்கள், அனுபவசாலிகள் அறிந்து, உணர்ந்து சொன்ன இவற்றை மறுக்கும் அளவுக்கு எனக்கு அனுபவமும், உண்மை விளக்கமும் தெரிந்திருக்கிறதா? இதை எழுத நான் தகுதியானவனா? என்பவை அவற்றில் முதன்மையான கேள்விகள்.
நான் படித்த ஆன்மிக, அறிவியல், நாத்திக நூல்களில் ஆன்மிக நூல்கள் தவிர்த்தவை தெளிவானவையாக அறிய முடிகிறது. அறிவியல், நாத்திக நூல்களில் ஒரு விளக்கம் எல்லா இடங்களிலும் ஒன்றுபோலவே காணப்படுகிறது.
ஆன்மிக நூல்களில் மட்டும் ஒரே செயுள், சம்பவங்களுக்கு ஒவ்வொரு ஆசிரியரும், கருத்தாளர்களும் சொல்லும் விளக்கங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாததாக இருந்து ஒவ்வொருவரையும் குழப்பிக் கொண்டிருக்கிறது. அவற்றில் பல கருத்துக்கள் தெளிவற்ற சிறுபிள்ளைத்தனமானவை என்பதை நான் அறிந்து கொண்டேன். அப்படிப்பட்ட விளக்கத்தை அளித்தவர்கள் மக்களால் வணங்கப்படும் மகான்களாக இருக்கிறார்கள்.
எனவே எனது அனுபவங்கள் குறைவாக இருப்பினும் அவற்றை பதிவாக செய்வதில் பிழையில்லை என்றே கருதுகிறேன். இது என்னை மேலும் பக்குவப்படச் செய்யும் என்பதோடு, பலருக்கும் பயன்படத்தகுந்தது என்ற எண்ணத்துடன் எனது கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்.

தொடக்கத்தில் நான் சாத்திரங்கள் கற்றவன் இல்லை. பகவத்கீதை, பைபிள் (முழுக்க) படித்தவன் அல்ல. பாசுரங்கள் பாடத் தெரிந்தவனும் அல்ல. கடைக்கோடி கந்தசாமி போல எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சக்தி இருப்பதாகவும், அது என்னை கவனித்துக் கொண்டும், வழி நடத்திக் கொண்டும், எனக்கு வேண்டியதை அருளிக் கொண்டிருப்பதாகவும் நம்பிக்கொண்டிருப்பவர்களில் ஒருவனாக இருந்தேன். கடவுளை அந்த ரீதியிலேயே நம்பினேன், வணங்கினேன், அணுகினேன்.
ஆனால் அனுபவம் பெருகப் பெருக எனக்கு கடவுளின் செய்கை என்பதில் சந்தேகம் வந்தது. வேண்டுதல்கள் நிறைவேறவில்லை. நாமாக வேண்டி நாமாக சமாதானம் செய்து கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
இதுபற்றி மற்றவர்களிடம் விளக்கம் கேட்டாலும் அவர்களும் சமாதானம் சொன்னார்கள். இன்னும் உறுதி வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். பாவம் தீர்ந்த பிறகு உங்கள் வேண்டுதலுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்றார்கள். இறைவன் அருளும் வரை அமைதியாக இருங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள்.
இதற்குமேல் தெளிவான விளக்கம் எங்கேயும் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரிடமும் கேட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தால் உருப்பட முடியாது என்று உண்மை தெரிந்தது. இறுதியில் எல்லாவற்றுக்கும் மேலே இருப்பவன் என்று சொல்லப்பட்ட இறைவனிடமே (மனதிற்குள்ளாக வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனை இறைவனுக்கு கேட்கும் என்று சொல்லி இருந்தார்கள்) கேட்டேன். என் வேண்டுதல் உனக்கு கேட்கவில்லையா. என் உறுதி போதவில்லையா, நான் செய்த பாவங்கள் தீரவில்லையா? நான் என்ன பாவம் செய்தேன் அது தீர்வதற்கு?, எல்லாம் உன்னால் நடத்தப்படுகிறது என்றால் இங்கே எது பாவம்? என்னால் எப்படி பாவம் செய்ய முடிந்தது?. எனது கேள்விக்கு பதிலளிக்க மாட்டாயா? என்று கேட்டேன்.
பதில் இன்னும் வரவில்லை.
பிறகும் நானாக சொல்லிக் கொண்டேன். பதில் உரைக்கும் வரை உன்னை வணங்குவதில்லை. நான் இந்த முடிவுக்கு வந்த பிறகு நான் கடவுள் நம்பிக்கையற்றவன் என்பதை வெளிப்படையாக தெரிவித்தேன். அப்படியென்றால் நீ பெரியார் கோஷ்டியா? என்று கேட்டார்கள். அதுவரை பெரியாரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாத நான் சில பகுத்தறிவு நூல்களை வாங்கி படித்தேன். அதில் இன்னும் சீரிய கேள்விகள் இறைவனை நோக்கியும், பக்தர்களை நோக்கியும் வீசப்பட்டு பதில் உரைக்கப்படாமல் கிடந்தன. அவையும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இருந்ததால் நான் பெரியாரின் கருத்துக்களில் ஈடுபாடு உள்ளவனாகவும், நாத்திகனாகவும் தொடருகிறேன்.
ஆக மகான்கள் அளித்து வரும் விளக்கத்தை சிறிது சிந்தனையுடன் அணுகியதால் கடவுளின் அருள் பொய் என்பதை உணர்ந்து கொண்டேன். அது உண்மையற்றதாக இருப்பதையும், கற்பிக்கப்பட்டதாக உள்ளதையும் அறிந்து கொண்டேன்.
நான் (படித்து, அனுபவித்து) அறிந்ததும், மக்கள் எழுப்பும் சில ஐயங்களுக்கு எனது விளக்கமும் இனி!

Friday, November 11, 2011

முதல் சந்தேகம்

ஓம் நமச்சிவாய
எந்த நிலையிலும் உள் மனதில் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு வாழ்வை நடத்துபவர்கள் இம்மை மறுமை இரண்டையும் கடந்து எல்லா மகிழ்ச்சியையும் பெற்று கையிலாயத்தை அடைவார்கள்.
ஓம் நமோ நாராயணா
இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் எல்லா பாவங்களும் நீங்கி வைகுண்டத்தில் இடம் பெறுவார்கள்.

இந்த 2 வரிகளை ஒரு நிமிடம் கவனித்துப் (படித்தாலே) பார்த்தாலே கடவுளின் பிறப்பும், பக்தியின் அழகும் தெளிவாகிவிடும். அதாவது உங்களுக்கு துக்கமோ, கலக்கமோ வாழ்க்கையில் என்ன நடந்தாலும் உள் மனதில் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தால் நிம்மதி கிடைக்குமாம். அதுமட்டுமல்லாமல் எங்கும், எப்போதும் மகிழ்ச்சி, இன்பம் நிரம்பி இருக்கும் இடமென்று கருதப்படும் கயிலாயம் மற்றும் வைகுண்டத்தில் இடம் கிடைக்குமாம்.
இதில் இருந்து என்ன தெரிய வருகிறதென்றால் மனிதன் கவலைகளால் தடுமாறும் ஒரு உயிரினம். அவனது கவலைகளுக்குத் தீர்வாக மனதை தேற்ற ஒரு வழி தேவை. கவலைகள் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியோடு இருந்தால் நலமென்று அவனது மனம் நினைக்கிறது.
அவன் இப்படிப்பட்ட நிலையில், கவலையில் தவிக்கும்போது உனது கவலைகளை ஆண்டவனிடம் சொல்லிவிட்டு நீங்கள் உங்கள் கடமையை ஆற்றுங்கள். அவன் உங்கள் கவலைகளைப் போக்குவான் என்று ஆறுதல் சொல்லப்பட்டு பக்தி பரப்பப்படுவதால் மனிதர்கள் கோவில்களில் கூடிவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் கவலைகள் தீராதா என்ற ஏக்கம்தான் காரணம்
கவலையைப் போக்கும் கடவுள் ஒருவர் இருக்கும்போது எனக்கு எப்படி கவலை வந்தது? என்று சிந்திப்பவர்கள் யாருமில்லை. அதன் விளைவாகவே ஆலயங்களில் அலைமோதும் கூட்டம் அழுது புலம்பி கவலைகள் தீராதா என்று முறையிட்டு வருகிறது. கவலை தீர்ந்ததாக எண்ணியவர்கள் நன்றிக்கடனாக வேண்டியதை செய்து வருகிறார்கள். இதில் இருந்து கவலையால் தேம்பும் மனிதனின் ஆறுதலுக்காகவும், தேறுதலுக்காகவும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்றுதான் கடவுள் என்பது வெளிப்படையாகவே தெரிய வருகிறது.
ஆனால் நான் இதுபோன்ற விஷயங்களில் நம்பிக்கையற்றவன். கடவுள் என்பது பொய் நம்பிக்கையாக தெரிகிறது என்று கூறி வருகிறேன்.
இங்கு வேண்டிக்கொள்வதும் நாமாக இருக்கிறோம், செயல்படுபவரும் நாமாக இருக்கிறோம். பலனை அனுபவிப்பவர்களும் நாமாக இருக்கிறோம். (உதவுபவர்கள் மற்றொரு மனிதராகவே இருக்கிறார்). பிறகு ஏன் எவனோ தருகிறான்? என்று ஏய்த்து வாழ வேண்டும்.
இதுபற்றி விவாதிக்கத் தொடங்கினால் சிலர் கடவுளின் சக்திக்கு அபூர்வ விளக்கங்கள் தருகிறார்கள். இத்தனைக்கும் அவை ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததாக இருக்கிறது. ஒருவர் சொல்வதில் ஓரிரு அம்சங்களையாவது மற்றவர் கண்டிப்பாக மறுக்கிறார்.
அப்படி மறுப்பவர்களில் நான் அதிகப்படியான விஷயங்களை மறுக்கிறேன். இறைவழியாக சொல்லப்பட்ட சில ஒழுக்கக் கருத்துக்களைத் தவிர இறைவன், இறையருள், நம்பிக்கையின் பலன் எனச் சொல்லப்படும் அத்தனை கூறுகளையும் நான் மறுக்கிறேன்.  அதனால் எனது எண்ணங்களை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகவே இதனை எழுதுகிறேன்.