Tuesday, November 15, 2011

பக்தி இல்லாவிட்டால் என்னாகும்?

பக்தி இல்லாவிட்டால் ஒழுக்கம் கெட்டுவிடும், மனிதன் காட்டு மிராண்டியாகிவிடுவான் என்கிறார்கள் சில இறை வக்காலத்து வாதிகள்.
இந்த உலகத்தை சற்று உற்றுக் கவனிக்கும் யாராவது இங்கு அனைவரும் மகிழத்தக்க வகையில் ஒழுக்கம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? காலம் காலமாக பரப்பப்பட்ட பக்தி ஒழுக்கத்தை வளர்த்திருக்கிறதா?
இறை நம்பிக்கையாளன் ஏமாற்றுவதில்லையா? தவறு செய்வதில்லையா? இறைவன் சொன்னதாக சொல்லப்படும் வாசகங்களை எழுதி வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டும் ஆட்டோக்காரர்களில் பெரும்பாலானவர்கள் நடந்து செல்பவர்கள் வழிகேட்டால்கூட சொல்ல மாட்டேன் என்கிறார்கள். ஆட்டோவில் சவாரி வருகிறாராயா? என்றுதான் கேட்கிறார்கள்.
பூசணிக்காயை உடைத்து, சாம்பிராணி காட்டி வியாபாரத்தை தொடங்கும் ஒவ்வொருவனும் யாரிடமாவது கூடுதலாக ஒரு பைசா லாபம் வைத்து (ஏய்த்து) விற்று விடலாமா? என்று நாள் முழுவதும் காத்துக் கொண்டிருக்கிறான்.
பக்தர்கள் இப்படி இருக்கும்போது மதங்களும், தெய்வங்களும்கூட பிரிவினையையும், ஒழுக்கக்கேட்டையும் வற்புறுத்துகின்றன.
நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்கிறார்கள் ஒரு மதத்தினர்.
தேவனை ஒத்துக் கொள்ளாதவர்கள் எல்லாம் சாத்தானின் குழந்தைகள் என்கிறார்கள் இன்னொரு மதத்தினர்.

தங்கள் இறைக்கருத்தை எதிர்ப்பவர்களை, சாடுபவர்களை அழிப்பது புனிதப்போர் என்கிறது ஒரு மதம்.
அன்பையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் அத்தனை தெய்வங்களும் ஆயுதம் ஏந்தி நிற்கின்றன. தானே படைத்துவிட்டுவிட்டு தன்னை நம்பாதவர்களை மீளாத நரகத்தில் தள்ளுவேன் என்கின்றன ஒவ்வொரு தெய்வங்களும்.
ஒரு அவதாரத்தில் ஒருத்தியுடன் வாழ வேண்டும் என்று சொல்கிறது ஒரு தெய்வம். அடுத்த அவதாரத்தில் அந்த ஊரில் உள்ள அத்தனை பெண்களையும் (கோபிகைகள்) ஆடையின்றி நிற்கவைத்து ரசித்து ஆனந்தப்பட்டு திருவிளையாடல் புரிகிறது அதே தெய்வம். இன்னொரு மதம் சொல்கிறது இங்கே ஒரு மனைவியுடன் ஒழுக்கமாக வாழ்ந்தால் சொர்க்கத்தில் பல பெண்களுடன் இன்பம் அனுபவிக்கலாம் என்று..
இப்படி எல்லா தெய்வங்களும், மதங்களும் நிறைய கறைபடிந்தே நிற்கின்றன. அவை சொல்லும் ஒழுக்கங்களும் அந்த அளவிலானவையே.
எந்த தெய்வமும் ஒழுக்கமாக பிறந்ததாக சொல்லப்படவில்லை. தானாக தோன்றியது சுயம்புவாம். ஆவியால் கர்ப்பமான கன்னி, ஒரு தெய்வத்தை பெற்றெடுத்திருக்கிறாள். (அவரை நம்புபவர்கள் வீட்டில் உள்ள கன்னிகைகள் ஆவியால் குழந்தை பெற்றேன் என்றால் ஏற்றுக்கொள்வார்களா? சந்தேகப்படுவார்களா?) இன்னொரு தெய்வம் ஒளிக்குப் பிறந்ததாம்.
இப்படிப் பிறந்த தெய்வங்கள் ஒழுக்கமாக வாழ்ந்து மனிதர்களுக்கு நீதி போதித்திருக்கின்றன. அறிவுரை வழங்கிச் சென்றிருக்கின்றன.
தெய்வங்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்தும் இங்கு அமைதியும், ஒழுக்கமும் இல்லை. அப்படியானால் தெய்வங்களின் அவதாரம் பொய்யாக இருக்கலாம். அல்லது முன்னோர்களில் சிறந்தோருக்கு சிறப்பு சேர்ப்பதாக எண்ணி சொல்லப்பட்ட விஷயங்கள் அவர்களை தெய்வமாக்கி பின்னால் வரும் சந்ததிகள் பேசும் அளவுக்கு உயர்ந்திருக்கலாம்.
எனவே உயர்த்திச் சொல்லப்படுவதால் அவை உண்மையாக இருக்காது. பயமுறுத்தி வளர்ப்பதால் ஒழுக்கமும் வளராது.

No comments:

Post a Comment